ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் பாதிக்கும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற கலைப்பிற்கு அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது என்றும் உரிய காலத்தில் புதிய ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தால் அதை நாம் ஏற்றுக்கொள்வோம். அது வரையில் நாடாளுமன்றம் செயற்படுவதற்கான மக்கள் ஆணையாக இருக்கிறதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி தேர்தலையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கட்சிக்குள் குழப்பமான நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “அமைச்சரவை தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும். தனித்தனியாக அமைச்சர்கள் பதவி துறப்பது தவறான முன்மாதிரியாகும். எனவே பிரதமர் கட்சி தலைவர்களையும் அமைச்சர்களையும் அழைத்து பேச வேண்டும். அதிகாரம் தொடர்பாக சட்டபூர்வமான சாதக நிலைமை எம்பக்கம் இருந்தாலும் புதிய ஜனாதிபதியின் தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எமக்கு முழு சம்மதம்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து தெரிவிக்கிறது. புதிய ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்துகொண்டபோது சிங்கள வாக்குகளால் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டதாகவும் தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்த ஆதரவு வழங்கவில்லை என்று கூறியதை கவனத்தில்கொள்கின்றோம்.
நாம் அந்த வாக்குகளைப் பெற்றுத்தரவில்லை என்று அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார். எனினும் அனைத்து மக்களுக்கு ஜனாதிபதியாக அவர் செயற்படப் போவதாக கூறியிருக்கின்றமை வரவேற்கதக்கது.
எனவே அவர் முழு இலங்கைக்குமான தலைவராக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம். தேர்தலுக்கு பின்னர் சில இடங்களில் தமிழ் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது என்பதை ஜனாதிபதி கவனத்தில்கொள்ள வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

