எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார். நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை எங்களுடைய அப்பா இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 1 மணியை கடந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு வைரஸ் தொற்று நீங்கிய பிறகு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, நுரையீரல் உள்ளிட்ட பிற உறுப்புகளில் உள்ள தொற்று தொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது உயிர் பிரிந்து விட்டதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இல்லை: பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி
அவரது உடல் எப்போது மருத்துவமனையை விட்டு புறப்படும் என எம்ஜிஎம் மருத்துவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எஸ்.பி.பியின் உடல், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தாமரைபாக்கத்தில் உள்ள அவரது சொந்த இடத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அது இன்று இரவா, நாளை காலையா என்பதை பிறகு தெரிவிக்கிறோம். அரசு அனுமதி கொடுத்த பிறகு அது முடிவெடுக்கப்படும். கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை இல்லை” என்று தெரிவித்தார்.

