மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, தபால் விநியோக நடவடிக்கைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரம் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுத் தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் தபால் பரிமாற்றங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் மாத்திரமே இடம்பெறும். அத்துடன், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தபால் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்படும்.
தபால் திணைக்கள வாகனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், உள்நாட்டுத் தபால் விநியோகத்தில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வரும் தபால்கள் சீராகக் கிடைப்பதில்லை என்பதுடன், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால்களும் பாரிய தாமதங்களை எதிர்நோக்கியுள்ளன.
தபால் விநியோகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர ஏனைய நாட்களில் தபால் அலுவலகங்கள் திறந்திருக்கும். எனவே, பொதுமக்கள் தங்களது தபால் பொருட்களை வழமை போன்று தபால் அலுவலகங்களில் ஒப்படைக்க முடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

