உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதியளிக்கப்படாத எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்காது பாரபட்மின்றி செயற்படவேண்டியது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான இயலுமை அபிவிருத்தித் திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துதல் தொடர்பாக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான 10மில்லியன் மதிப்பிலான உபகரணங்கள், பொருட்கள் கையளிப்பு நிகழ்வு இன்று காலை வட மாகாண உள்ளுராட்சி திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சாள்ஸ், வட மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ச.மோகநாதன், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஒருங்கிணைந்த சேவைகள் குழுத்தலைவர் சோனாலி தாகீர், வட மாகாண சபை திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் உமாகாந்தன், உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்துகின்ற உள்ளுராட்சி ராட்சி மன்ற அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் வீ.நவநீதன், பிரதேச சபைகளின் செயலாளர்கள, உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாநகர சபையின் பிரதி முதல்வர் மற்றும் பதில் முதல்வர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

