இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 35 கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் (TVK) விஜய் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக கடற்றொழிலாளர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக விடுவிக்க வேண்டும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.
மற்ற மாநில கடற்றொழிலாளர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் கடற்றொழிலாளர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.
															
