எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் மகன் சரண் ஏற்பாட்டின் பேரில் அமெரிக்க நகரங்களில் எஸ்பிபி-50 என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது திடீரென இளையராஜா, “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நான் இசை அமைத்த பாடல்களை அனுமதியின்றி பாடக்கூடாது” என்று நோட்டீஸ் அனுப்பினார். இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டது. அதன் பின் பல மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கட்டிபிடித்தபடி இருந்த போட்டோக்கள் வெளியானது. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு சென்னையில் நடந்த இசை விழாவில் இருவரும் இணைந்து பாடினார்கள். இதேபோன்ற ஒரு நிகழ்ச்சி நவம்பர் மாதம் 3ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. நிகழ்ச்சி தொடர்பாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இளையராஜாவுடனான மோதல் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இளையராஜாவுக்கும் எனக்கும் இடைவெளி என்பது ஒருபோதும் இல்லை. அவர் எப்போது அழைத்தாலும் போவதற்கு நான் தயாராகவே இருப்பேன். அவர் அழைத்தார். நான் போனேன். முன்பு மாதிரியே சேர்ந்து பணியாற்றினோம். ஒரு குடும்பத்தில் இருக்கிறவர்கள் இடையே சிறு மனஸ்தாபங்கள் வரும். பிறகு சரியாகி விடும். மீண்டும் சேர்ந்து விடுவார்கள். அதுமாதிரி தான் எங்களுக்கும் நடந்தது. காரணம் நாங்கள் ஒரே இசை குடும்பம்.
இளையராஜாவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை சிறியது தான். இருவரும் அதை மறந்து விட்டோம். உன்னை கட்டிப்பிடிக்கணும் போல் இருக்குடா? என்று சொன்னார். உடனே போனேன் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டோம். அதோடு எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது.
இருவரும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து பங்கேற்றோம். அவர் இசையமைப்பில் சமீபத்தில் 2 பாடல்களை பாடினேன். ஒரு பெரிய மரத்தை புயல் வந்து சாய்த்து விட்டு போய் விடும். ஆனால் அருகம்புல் எப்போதும் சாயாமல் அப்படியே இருக்கும். நான் ஒரு அருகம்புல் என்றார்.