இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த அவர் அங்கு சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (17) காலை அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றியபோது, பரிந்துரைக் கடிதங்களை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் இருந்த கோட்டாபய ராஜபக்ச
இந்தநிலையில் இது குறித்து நடைபெற்று விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி வழங்கிய கடிதங்கள், கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு வளாகத்தில் பல தனிநபர்கள் சட்டவிரோதமாக வீடுகளைப் பெற அனுமதித்ததாகக் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் பெப்ரவரி 12 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம், சிங்கப்பூரில் இருப்பதாக எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்றையதினம் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
