இலங்கை தமிழர்களுக்கு (Srilankan tamils) தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை நேற்று (08.06.2025) மனுவை மதுரை ஆதீனம், இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் (Amit Shah) கையளித்துள்ளார்.
அத்துடன் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நடவடிக்கை
இது தொடர்பில் மதுரை ஆதீனம் கருத்து வெளியிடுகையில் “பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்போதும் அவரை சந்தித்து பேசினேன். இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.

அவரை கோயில் முன்பு வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன்.
அதில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும்.
இந்திய கடற்றொழிலாளர்கள் தாக்கப்படாமல் இருக்கவும், கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளேன் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.