இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் 05 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட ஏ குழு போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ் 5 – 1 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை அணியில் இடம்பெறும் கிண்ணியா அல் அமீன் வித்தியாலயம் கோல் காப்பாளர் மொஹமத் ரிஹாஸ் இந்தப் போட்டியில் எதிரணியினரின் பல கோல் போடும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி இராவிட்டால் பங்களாதேஷின் கோல் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு டசின்களாக உயர்ந்திருக்கும்.
ரிஹாஸினால் இலங்கை அணி படுதோல்வி அடைவது தவிர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் சொந்த மண்ணில் இலங்கையின் கௌரவமும் காப்பாற்றப்பட்டது.
இலங்கை இளையோர் அணியின் பின்கள வீரர்கள் தவறிழைத்ததாலேயே போட்டியின் ஆரம்பத்திலேயே பங்களாதேஷ் இரண்டு கோல்களைப் போட்டது.
போட்டியின் 7ஆவது நிமிடத்தில் ருபெல் ஷெய்க், 11ஆவது நிமிடத்தில் முர்செத் அலி ஆகிய இருவரும் கோல்களைப் போட்டு பங்களாதேஷை முன்னிலையில் இட்டனர். அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை பின்கள வீரர்கள் தடுத்தாடுவதில் விட்ட தவறுகளே கோல் போடப்படுவதற்கு காரணமானது.
அதன் பின்னர் ஆக்ரோஷத்துடன் விளையாடிய பங்களாதேஷ் அணியினர் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கோல்போடுவதற்கு எடுத்த 12க்கும் மேற்பட்ட முயற்சிகளை தனது அற்புத ஆற்றல்களால் இலங்கை கோல்காப்பாளர் ரிஹாஸ் தடுத்து நிறத்தினார்.
இடைவேளையின்போது பங்களாதேஷ் அணி 2 – 0 என முன்னிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பின்னரும் கோல்காப்பாளர் ரிஹாஸ் தனது தனி ஆற்றல் மூலம் பங்களாதேஷின் முயற்சிகளை முறியடித்த வண்ணம் இருந்தார்.
எனினும் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் முர்செத் அலி தனது 2ஆவது கோலைப் போட்டு பங்களாதேஷின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார்.
இரண்டு நிமிடங்கள் கழித்து இலங்கை சார்பாக யாசிர் ஷப்ராஸ் இலகுவான கோல் ஒன்றைப் போட்டு அணிக்கு ஆறுதலை ஏற்படுத்தினார்.
எனினும் மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து (79 நி.) இஸ்லாம் ரானாவும் உhபதையீடு நேரத்தில் மொஹமத் நசிமுதினும் கோல்களைப் போட பங்களாதேஷ் 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இலங்கை தனது 2ஆவதும் கடைசியுமான போட்டியில் மாலைதீவுகளை எதிர்வரும் 9ஆம் திகதி இதே மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு எதிர்த்தாடும்.

