இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நேற்று முன்தினம் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 18 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கின்றது.
அத்தோடு உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பொறுப்புக்கூறல், நினைவுகூரல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறிப்பிடத்தக்களவிலான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.