ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம் மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு வகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பிற்போடப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (11) அறிவித்தது.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையில் உருவெடுத்த இன்னோரென்ன சவால்கள், விமான சேவை கட்டுப்பாடுகள் ஆகியன காரணமாக இந்தத் தொடர்கள் வருடத்தின் கடைசி காலாண்டு பகுதிக்கு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சபை தெரிவித்தது.
வரவேற்பு நாடாக ஆப்கானிஸ்தானினால் முதல் தடடைவையாக இலங்கை அழைக்கப்படவிருந்த இந்தத் தொடரில் 6 போட்டிகள் நடைபெறவிருந்தது.
இலங்கை செய்திகள்
மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை ஷார்ஜாவில் மார்ச் 13, 15, 17ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் மார்ச் 20, 22, 25ஆம் திகதிகளில் நடைபெறுவதாக இருந்தது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஒப்புதல் கிடைத்ததும் இரண்டு இடங்களில் இத் தொடர்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.
எனினும் மார்ச் மாத ஆரம்பத்தில் எதிர்பாராமால் இடம்பெற்ற சம்பவத்தால் தொடருக்கான பயண ஏற்பாடுகள், செயற்பாட்டு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலைமையை அடுத்து முக்கிய பங்குதாரர்களான எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை, ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கம், துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை பிரிதிநிதிகள் கடந்த 4ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நிலைவரத்தையும் உன்னிப்பாக அவதானித்து வந்தனர்.
இதனை அடுத்து மார்ச் 9ஆம் திகதிவரை பொறுத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
திட்டமிட்டவாறு தொடர்களை நடத்துவதற்கு சகல தரப்பினரும் கூட்டாக முயற்சித்தபோதிலும் விநியோகம் மற்றும் போக்குவரத்து சவால்கள் கட்டுப்பாட்டை மீறியதால் தொடரை பிற்போட்டு போட்டிகளை மீள அட்டவணைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்த செயல்முறை முழுவதும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு விரிவாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டு அதன் ஒப்புதலுடன் தொடர்களை பிற்போடத் தீர்மானிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது.