நயன்தாரா நாயகியாக நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் ராதாரவி பேசியது சர்ச்சையாக மாறியது. இதனால் திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்தனர். அவர் சார்ந்த திமுக., கட்சி அவரை கண்டித்திருப்பதுடன் கட்சியிலிருந்து தற்கொலிமாக நீக்கி உள்ளது.
இந்நிலையில் ராதாரவிக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு…
சமீபத்தில் நடந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பெண்களைக் கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய இரட்டை அர்த்த வசனங்களைக் கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது. இதை, தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாகத் தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது.
இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் அவமானமான சூழ்நிலையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதைத் தாங்கள் ஏன் உணரவில்லை?
திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கக்கூடிய தாங்கள், தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால், அது வருகிற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.
ஆனால், இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுகள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது. மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழியும் என்பதை ஏன் உணரவில்லை? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதைத் தவிர்த்து, இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துரையில் தங்களுக்குத் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றித் தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.