சிக்கிம், திபெத் எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனாவும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின் திபெத் பகுதி சந்திக்கும் எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போர் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவில் டோக்லாம் என்றும் சீனாவில் தொங்லாங் என்றும் அழைக்கப்படும் இந்த பீடபூமியில் புதிதாக சாலை அமைக்க சீன ராணுவம் முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்றனர். அப்போது எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட லாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தலைவர்களும் அதிகார பூர்வமாக சந்தித்துப் பேசவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக இருநாடுகளும் சிக்கிம், திபெத் எல்லையில் பெருமளவில் படைகளை குவித்து வைத்துள்ளன. அங்கு சீன ராணுவ தரப்பில் அடிக்கடி போர் பயிற்சி நடத்தப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமை யகமான பென்டகன் செய்தித் தொடர் பாளர் கேரி ரோஸிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கருத்து கோரியது. அவர் கூறியபோது, எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதே கருத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு கூறியது.
பிரிக்ஸ் மாநாடு
இந்த மாத இறுதியில் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்கிறார். அப்போது சீனாவின் மூத்த தலைவர்களை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்புகளின்போது எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.