பாகிஸ்தானின் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக சமீபத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்துக்கு தற்போது பாகிஸ்தான் பதில் அளித்திருப்பதுடன் இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: பொறுப்பற்ற முறையில் இந்திய ராணுவ தளபதியின் பேச்சு உள்ளது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார்.
அணுஆயுத சண்டை தான் விருப்பம் என்றால், இந்தியா எங்களது பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பாசில் வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தொணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியா எங்களை தவறாக எடைபோட வேண்டாம். தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் பாகிஸ்தான் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.