இலங்கையின் (Sri Lanka) உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா (Isaipriya) பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகள் மேற்கொள்ளுமாறு தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறை மா அதிபருக்கு அவர் மனு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச மனிதாபிமான சட்டமீறல் ஆகும்.
மனிதாபிமான சட்டம் மீறல்
தனுக ரணஞ்சக கஹந்தகமகே ஆகிய நான் இந்த மனுவை மதிப்பிற்குரிய உங்கள் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கின்றேன்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த மக்களை கொன்றது கடுமையான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறலை குறிக்கின்றது.
இந்த சம்பவங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றங்களின் கீழ் அடங்கும் என்பதுடன் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

இசைப்பிரியா மற்றும் பாலசந்திரன் தொடர்பான சம்பவங்கள் போர் நேரத்தில் சரணடைந்தவர்களிற்கான மீறல்களை குறிக்கும் முக்கிய எடுத்துக்காட்டுக்கள்.
இவர்களின் இறப்புகள் குறித்து விசாரணை செய்யப்படாமல் விடக்கூடாது. இலங்கை காவல்துறை உண்மை, பொறுப்பு நியாயத்திற்கு வழிவகுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்”என தெரிவித்துள்ளார்.