‘எங்கள் திருமணம் காதல் திருமணம்’ என நடிகர் ஆயிஷாவும், நடிகை சாயிஷாவும் சொல்லிக் கொண்டிருக்க, ‘நடக்கப் போகும் திருமணம் காதல் திருமணம் அல்ல; இரு வீட்டார் பேசி முடிவெடுத்து, அதன் பின் நடக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்’ என நடிகை சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியுள்ளார்.
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் ‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் பேத்திதான் சாயிஷா.
ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின.
இதையடுத்து, காதலர் தினமான பிப்ரவரி 14ல், நடிகர் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், தானும் சாயிஷாவும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பதிவிட்டு, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதே பதிவை அப்படியே சாயிஷாவும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, இருவருக்கும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இவர்களது திருமணம் குறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியிருப்பதாவது:
இந்தத் திருமணத்தில், எங்களுக்கு முழு விருப்பம் உள்ளது. எங்கள் குடும்பத்தாருக்கும், ஆர்யா குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, ஆர்யாவின் ட்வீட் அமைந்து இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, இந்த முடிவு இரு குடும்பத்தாரும் இணைந்து எடுத்தது. ஆர்யாவின் குடும்பத்தாருக்கு, சாயிஷாவை பிடித்துப் போயிருந்ததால் திருமணத்திற்காக அணுகினர். ஆர்யா என் மகளைத் திருமணம் செய்து கொள்வது, மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.