ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ‘ ஆனையிறவு உப்பு’ என்ற நாமத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 27/2 இன் கீழ் கடந்த அமர்வின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் நாமம் ( பெயர்) ரஜ உப்பு என்று குறிப்பிடப்படுகிறது. முழு சந்தை கட்டமைப்பையும் கைப்பற்றுவதற்காகவே இந்த பெயர் நாமம் பயன்படுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு பிரதிநிதிகளின் வலியுறுத்தலுக்கு அமைய ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ ஆனையிறவு உப்பு’ என்று குறிப்பிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒரு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளார்கள். உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள் வழங்கப்படவில்லை. முறையான வழிமுறைகளுக்கு அமைவாகவே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே அரசியல் தலையீடு உள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.. தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.