கண்டி அஸ்கிரிய மஹாநாயக்கர் சங்கைக்குரிய வரகாகொடா ஸ்ரீ பஞ்ஞான ஞானரத்தின விதான தேரர் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ளார்.
பலாலி விமான நிலையத்துக்கு, நேற்று மாலை வந்தடைந்த மஹாநாயக்கரை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி வரவேற்றார்.
அத்துடன், வடக்கு கட்டளைத் தளபதி, பலாலி விமானப்படை தளபதி ஆகியோரும் மஹாநாயக்கரை வரவேற்று, ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அங்கு, விசேட சந்திப்பொன்றை நடத்திய மஹாநாயக்கர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின், தற்போதைய நிலைமை தொடர்பில், இராணுவ உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை, யுத்தத்துக்குப் பின்னர், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் மீள் உருவாக்கத்துக்கு, இராணுவத்தின் பங்களிப்பு தொடர்பிலும் மஹாநாயக்கர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
இராணுவத்தால் கீரிமலையில் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களையும் அவர் பார்வையிட்டார். அதன் பின்னர் புராதன இடங்களான ஜம்புகோளப்பட்டினம், கந்தரோடை விகாரை என்பனவற்றிக்கும் மஹாநாயக்க தேரர் சென்றார்.