காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல், டிசம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் புதிய அணி உருவாகி தேர்தலை சந்திக்கவுள்ளது. தலைவர் பதவிக்கு இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தர், செயலாளர் பதவிக்கு “மன்னன் பிலிம்ஸ்” மன்னன் போட்டியிடுகின்றனர்.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர்: தயாரிப்பாளராக இருந்தை விட விநியோகஸ்தராக நிறைய சம்பாதித்துள்ளேன். இன்றும் நான் உறுப்பினராக உள்ளேன். சினிமா விநியோகஸ்தர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. நண்பர்கள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். சினிமாவை காப்பாற்ற யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.
ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி தொடங்கவில்லை, ஆட்சியில் இருப்பவர்களை பிடி பிடியென பிடிப்பதற்காக கட்சி தொடங்கினேன். சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் பல போராட்டங்களுக்கு பின்னர் சாதித்தவர்கள். சினிமாவில் அவர்கள் எனக்கு மூத்தவர்கள். ஆனால் அரசியலில் அவர்களை விட நான் தான் சீனியர். அரசியலில் அவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து கூற முடியாது. அரசியலில் ஜெயிக்க அனுபவம் மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்றார்.