ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
மக்கள் ஆணைக்குழு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசியல் அமைப்பிற்கு அமைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரிடும்.
அதனை கொண்டுவருவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான யோசனையில் வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
பாராளுமன்றம் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் கூறுகையில்,
இன்றைய நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க ஒரு சில அரசியல் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது, அதேபோல் அரசியல் மீள் கட்டமைப்பொன்றை செய்ய வேண்டியுள்ளது, அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தங்களையும் செய்ய வேண்டியுள்ளது.
குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறைக்கு இடையிலான அதிகார பகிர்வை முன்னெடுக்க வேண்டும்.
அவ்வாறான அரசியல் அமைப்பொன்றை உருவாக்கும் வேலைத்திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும்.
இப்போதுள்ள நிறைவேற்று அதிகாரத்துடனும், ஜனாதிபதியுடனும், 20 ஆம் திருத்தத்துடனும் வேறு மாற்று அரசாங்கம் ஒன்றினை சிந்தித்துப்பார்க்கவே முடியாது.
ராஜபக்ஷ குடும்பத்தை நீக்கிவிட்டு முன்னோக்கிய பயணம் குறித்து சிந்திப்பதென்றால் அது குறித்து எம்மால் சிந்தித்துப்பார்க்க முடியும்.
இன்று நாடும் மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிக்கு இரங்கி போராடிக்கொண்டுள்ளனர்.
இந்த ஜனாதிபதியை நீக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். கள்ளர்களுடன் எவ்வாறு ஆட்சியை நடத்துவது.
இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை என்றால் கொள்கை அடிப்படையில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம். பொறுப்புகளில் இருந்து தப்பித்து செல்லமாட்டோம்.
ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும், அதற்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.
மக்கள் ஆணைக்குழு அரசாங்கம் செவிமடுக்கவில்லை என்றால் அரசியல் அமைப்பிற்கு அமைய அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர நேரிடும். அதனை கொண்டுவருவோம்.
அதற்கு 225 பேரின் ஆதரவையும் வழங்குங்கள். இதுவே மக்களுக்காக நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என்றார்.
இந்நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான நேற்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் 18 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்ததுடன், ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி ஆளுங்கட்சியின் சுயாதீன உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும், ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளவும் முயற்சிகளை எடுப்போம் என தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் அதுகுறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ எம்.பி கேசரிக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]