அமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் உப வேந்தருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இப்படியான ஒருவர் இன்று சபையில் பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமாகவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நவவி இராஜினாமா செய்ததனால் ஏற்பட்ட இடைவெளிக்கு முன்னாள் உபவேந்தர் அக்கட்சியின் தலைவரினால் நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து உயர் கல்வி அமைச்சர் இன்று சபையில் ஆற்றிய உரையிலேயே இதனைக் கூறினார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில்தான், இவர் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதுதான் நாம் இன்று நாட்டில் முகம்கொடுக்கும் யதார்த்தம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.