ராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணியதால் கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலதுகரம் சஜீவானந்தன், அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய ஒலிநாடா .
ராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணிவந்ததால், ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையுடன் முரண்பட்டிருந்த மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின், ஆதரவாளர் சஜீவானந்தன் என்பவர், இலஞ்சம் பெற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ச அரசில் சேரும்படி, அமைச்சர் மனோ கணேசனுடன், அரசியல் நெருக்கடி வேளையான அக்டோபர் 31ம் திகதி, ரூபா 65 கோடிக்கு பேரம் பேசிய இந்த ஐந்தேமுக்கால் நிமிட ஒலிநாடாவை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் வெளியிட்டுள்ளது.
இந்த ஒலிநாடாவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன் என்ற நபர், ஜனநாயக மக்கள் முன்னணியின், இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையத்தில் இருந்து பல மாதங்களுக்கு முன் கட்சி விரோத செயற்பாடுகளால் வெளியேற்றப்பட்டவர் ஆகும். கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவரும், இன்னமும் சிலரும் சிலகாலம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் தொடர்புகளை பேணி வந்தனர். அமைச்சர் மனோ கணேசனை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் சண். குகவரதனின் மிக நெருங்கிய ஆதரவாளர், சஜீவானந்தன் ஆவார். கடந்த திங்கட்கிழமை, அமைச்சர் மனோ கணேசனுக்கு எதிராக, சண். குகவரதன் கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில், சண். குகவரதனுடன் மேடையில், ஒலிநாடாவில் பேரம் பேசுகின்ற சஜீவானந்தன் ஒன்றாக அமர்ந்திருந்தார். சண். குகவரதன் தலைமையில் இவர்கள் புதிய அரசியல் பயணம் போகப்போவதாக ஊடக மாநாட்டில் அறிவித்தனர்.
சண். குகவரதனின் வலதுகரமான சஜீவானந்தன், இந்த ஒலிநாடாவில், “நீண்டகாலமாக ப்ரோசசில் இருக்கும் மதில்மேல் பூனை” என்று அமைச்சர் ரவி கருணாநாயக்கவையும் போட்டுக்கொடுக்கிறார். அமைச்சர் மனோ கணேசன், நெருக்கடி வேளையில் தன்னுடன் பேசிய ஏனையவர்களை பற்றி சொல்கிறார்.
இந்த ஒலிநாடாவில், பேசப்பட்ட பல விடயங்கள் இன்னமும் இருப்பதாகவும், இது குற்றப்புலனாய்வு பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சின்னத்தம்பி பாஸ்கரா தெரிவித்துள்ளார்.