பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருமாறு கோரும் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை அடுத்த வாரம் நிதி அமைச்சினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரேரணை தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் சம்பள அதிகரிப்புக்கு நிகராக நூற்றுக்கு 215 வீதம் பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் சம்பளமும் அதிகரிக்கப்படுவதற்கான தீர்மானம் கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எம்.பி.க்களினதும், அமைச்சர்களினதும் சம்பளத்தை வழங்குவதற்கு 12 கோடி ரூபா குறை நிரப்ப வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த சம்பள அதிகரிப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செலுத்தப்படவுள்ளது. இதன்படி, ஒரு எம்.பி.க்கு நிலுவைச் சம்பளத்துடன் ஐந்து லட்சம் ரூபாவும், பிரதி அமைச்சர் ஒருவருக்கு ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாவும், அமைச்சர் ஒருவருக்கு ஆறு லட்சம் ரூபாவும் கிடைக்கப் பெறவுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்படும் தொகை 136 எம்.பி.க்களுக்கும் அவர்களது தனிப்பட்ட பாராளுமன்ற கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாகவும், அமைச்சர்கள் 41 பேரினதும், இராஜாங்க அமைச்சர்கள் 23 பேரினதும் பிரதி அமைச்சர்கள் 22 பேரினதும் சம்பள அதிகரிப்பு தொகை சபாநாயகரினால் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பள அதிகரிப்பு ஓய்வு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும் பெறும் படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

