இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரிக்குமானால், இஸ்ரேலுடனான துருக்கியின் உறவு துண்டிக்கப்படலாம் என்று துருக்கி அதிபர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கை முஸ்லீம்களுக்கான சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமையும் என்று துருக்கி அதிபர் ரிசெஃப் தாயிப் எர்துவான் தெரிவித்திருக்கிறார்.
டிரம்பிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பை, வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜெருசலேமின் தகுதி நிலை பற்றிய அமெரிக்க கொள்கைளை இந்த வாரம் திடீரென அமெரிக்க அதிபர் மாற்றலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மிகவும் பதற்றமான சிக்கல்களில் ஒன்றாக ஜெருசலேம் உள்ளது.
“டிரம்ப் அவர்களே! ஜெருசலம் முஸ்லிம்களின் சிவப்புக் கோடு” என்று செவ்வாய்கிழமை தொலைக்காட்சி உரையில் எர்துவான் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிரச்சனை தொடர்பாக இஸ்ரேலோடு இருக்கும் ராஜீய உறவை துண்டிக்கும் அளவுக்கு நாங்கள் செல்வோம்” என்று அவர் கூறியுள்ளார்.
டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை நகர்த்துவதற்கு திங்கள்கிழமை கையெழுத்திடுவதற்கு இருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் இன்னும் கையெழுத்திடவில்லை.
இது, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று.
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக் கொள்ளுமானால், 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவான பின்னர், அதன் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் முதல் நாடாக அமெரிக்கா மாறும்.
தங்களின் எதிர்கால பாலத்தீன தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனர்கள் உரிமை கொண்டாடி வருகையில், ஜெருசலேம் முழுவதையும் தன்னுடைய தலைநகராக இஸ்ரேல் கூறி வருகிறது.
ஜெருசலேமின் தகுநிலை என்ன?
ஜெருசலேமின் தகுதி நிலை இஸ்ரேல் பாலத்தீனருடன் கொண்டிருக்கும் மோதலின் முக்கிய பகுதியாக உள்ளது.
பாலத்தீனர்கள் அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகத்தின் ஆதரவை பெற்றுள்ளனர்.
இந்த நகரில், குறிப்பாக கிழக்கு ஜெருசலேமில்தான், யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களின் முக்கிய புனித இடங்கள் உள்ளன.
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் ஜோர்டனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இவ்விடத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேம் முழுவதையும் அதனுடைய தலைநகரமாக இஸ்ரேல் கூறி வருகிறது.
எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.
1967 ஆம் ஆண்டு தொடங்கி கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் ஒரு டஜன் குடியிருப்புக்களை கட்டி சுமார் 2 லட்சம் யூதர்கனை குடியேற்றியுள்ளது. சர்வதேச சட்டப்படி இது சட்டத்திற்கு புறம்பானது என்று கருதப்படுகிறது. இதை இஸ்ரேல் மறுக்கிறது.
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், பிற சர்வதேச சமூகத்திற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அமையும். கிழக்கு ஜெருசலேமிலுள்ள இஸ்ரேலிய சமூகத்தின் குடியிருப்புகள் அனைத்தும் சரியானவை என்று வாதிடும் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்.