வடக்கு –கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச தலைவரால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியின் முதலாவது கூட்டம் கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று தெரியவருகின்றது.
கூட்டத்தில் பங்கேற்று வடக்கு அபிவிருத்திகள் தொடர்பான விடயங்களை முன்வைப்பார். இனிவரும் கூட்டங்களில் பங்கேற்காமைக்கான காரணங்களையும் இதன்போது அவர் வெளிப்படுத்துவார் என்று கூறப்படுகின்றது.அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்திகாக சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 48பேர் செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விவரங்களைச் செயலணி திரட்டியுள்ளது.
திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொண்ட சவால்களையும் பட்டியலிட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, அரசியல் தீர்வின் பின்னரே அபிவிருத்தி என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை சில காரணங்களைப் பட்டியலிட்டு அரச தலைவர் மைத்திரிபாலவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கடந்த 11ஆம் திகதி ஊடக அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியிருந்தார்.
இருப்பினும் இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக கொழும்பில் முதலமைச்சர் தங்கியுள்ளார்.
தனது அதிகாரிகளுக்கு, இன்றைய கூட்டத்துக்குரிய விடயங்களைத் தயார்படுத்துமாறு முதலமைச்சர் ஏற்கனவே பணித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அவசரப்பட்டு முதலமைச்சர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். முதலாவது கூட்டத்தில் பங்குபற்றி, வடக்கு அபிவிருத்தியின் தேவைப்பாடுகளை வலியுறுத்தி, இந்தச் செயலணியில் தொடர்ந்து பங்கேற்காமைக்குரிய காரணங்களை அறிவித்துவிட்டு பங்கேற்காமல் விடுவதே சிறந்தது என்று முதலமைச்சருக்கு சில தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.
வடக்கு அபிவிருத்தி தொடர்பில் திட்டமிடுவதற்கு முதலமைச்சரை அழைத்தும் அவர் வரவில்லை என்று அரச தரப்புக்கள் தெரிவிக்கக்கூடும்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் செயலணியில் உள்வாங்கப்படாவிட்டாலும், முதலமைச்சர் பங்கேற்காவிட்டால் அந்தத் தரப்புக்கள் ஊடாக அரசு இதனைக் கையாளக்கூடும் என்றும் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கிய தரப்புக்கள் கூறியுள்ளன. இதனையடுத்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
இதற்கு அமைவாக இன்றைய கூட்டத்தில், பங்கேற்று வடக்கு அபிவிருத்தி தொடர்பான திட்டவரைவை முன்வைப்பதுடன், தான் ஏற்கனவே அரச தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களையும் செயலணிக்குத் தெரியப்படுத்துவார் என்றும் அறியமுடிகின்றது.

