அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மீதும், அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மஹர பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்ட சகல விடயங்களும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. பொய்களை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்கள்.
அதனால் மக்கள் இன்று துன்பப்படுகிறார்கள். அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தோற்றம் பெறும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் எவ்வித திட்டங்களும் இன்றளவில் தயாரிக்கப்படவில்லை.
அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தால் தான் எரிபொருள் விலை தொடர்ச்சியாக உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. எதிர்வரும் மாதங்களில் மின்கட்டணமும் மீண்டும் உயர்வடையவுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாக முகாமைத்துவத்தின் ஒட்டுமொத்த சுமையும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கத்தை அமைப்போம்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மீதும்,அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லை.
சிறந்த தரப்பினரை மாத்திரம் ஒன்றிணைத்து நாங்கள் பலமான அரசாங்கத்தை உருவாக்குவோம். இந்த அரசாங்கத்துக்கு அனுபவமில்லை என்பதை மக்கள் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்றார்.

