கடந்த ஆட்சிக் காலங்களில் ஏதோ ஒரு வகையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போதுள்ள ஆட்சியில் இதுவரை எந்த ஒரு அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) மாலை யாழ். சிவகுரு ஆதீனத்தில் முன்னெடுக்கப்பட்ட “நீதிக்கான சாட்சி” என்ற நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டு சாட்சி உரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் பேரிலே இன்றும் அரசியல் கைதிகள் சிறைகளில் சொல்லொணா துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை
30 வருடங்களை கழிந்து 31வது வருடத்தில் அரசியல் கைதிகளின் துயர வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இன்னமும் பத்து அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றனர்.
அவர்களில் சிவகுமார் பார்த்திபன் என்பவர் 30 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அரசியல் கைதிகளின் ஆயுள்கள் குறைவடைந்து செல்கின்றன.

30 ஆண்டுகள் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அரைவாசி காலம். மீதி காலத்திலாவது அவர்கள் தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வலிகளை அனுபவித்ததில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்த பொறுப்பான கடமைகளை செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றோம். அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து அரசியல் கைதிகளின் விடுதலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்பவர்களை ஒரு பயங்கரவாதிகள் போல் பார்த்து இந்த அரசு நடத்துகின்ற நிலை காணப்படுகின்றது.
இனப் பிரச்சினையின் விளைவாகத்தான் போர் ஏற்பட்டது அந்தப் போராட்டத்தின் விளைவாக தான் அவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
