இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்து வருகின்ற நிலையில், கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் அடுத்த வாரமளவில் மீளக் கூட்டடும் என்று தகவல் வந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்காக எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகளை கோட்டாபய – மஹிந்த தலைமையிலான அரசு நிராகரித்து வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்தத் தெரிவித்தபோது இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கொரோனா வைரஸினால் கண்டி மாவட்டத்திலுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பக்கச்சார்பாக வழங்கப்படுவதாக மக்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தின்போது அரசுக்கு ஆதரவானவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாக மக்களின் பிரதிநிதிகளே எம்மிடம் முறையிடுகின்றனர். நிவாரணங்களும் மக்களுக்கு போய்ச்சேரவில்லை. இந்நிலையில் அடுத்த வாரமளவில் நாடாளுமன்றம் மீளக் கூட்டப்படும் என அறியக்கிடைத்துள்ளது. அந்த முடிவை நாங்கள் வரவேற்கின்றோம்.
எமது பிரச்சினைகள், எமது கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகள், பக்கச்சார்பான விடயங்களை அரசிடம் எடுத்துக்கூற முடியும். பக்கச்சார்பாக அரசியல் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையைப் பார்க்காமல் நாடு என்பதை முதன்மைப்படுத்தி முடிவு காணும்படி வலியுறுத்துகின்றேன்” – என்றார்.

