மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களின் இயக்குனர் வினோத் இயக்க, ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் படம் பூஜையுடன் ஏற்கெனவே ஆரம்பமானது. ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த ‘பின்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்திற்கான நாயகிகள் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஒரு சில நடிகைகள் படத்தில் நடிக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், முன்னாள் நடிகை லிசி ஆகியோரின் மகளான கல்யாணி, ‘ராஜா ராணி’ பட நாயகிகளில் ஒருவரான நஸ்ரியா, ‘விக்ரம் வேதா’ பட நாயகி ஷ்ரத்தா ஆகியோர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாணி, தெலுங்கில் வெளிவந்த ‘ஹலோ’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தற்போது இரண்டு தெலுங்கு, மலையாளப் படங்களிலும், தமிழில் ‘வான்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மலையாள நடிகையான நஸ்ரியா, நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பதை விட்டுவிட்டார். இப்போது இந்தப்படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். ஷ்ரத்தா, ‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு ‘மாறா’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
அஜித் நடிக்கும் இந்த 59வது படத்தின் நாயகிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.