‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’ என நடிகர் அமிதாப் பச்சன் கூறினார்.
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்க உள்ள ‘சர்கார்- 3’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதையொட்டி அமிதாப் பச்சன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
எங்கள் வீட்டில் பலர் ‘திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான்’. சாதாரணமானவர்களாகவே நடந்து கொள்கிறோம். மற்றவர்கள் தங்கள் வீட்டில் சினிமா குறித்து என்ன பேசுகிறார்களோ அதுபோல தான் நாங்களும் எங்கள் வீட்டிலும் பேசிக்கொள்வோம்.
பேத்தி நடிக்கவில்லை
அபிஷேக் பச்சன் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், தொழில் செய்தாலும் முதலில் அவர் எனக்கு மகன். அதன் பிறகு தான் எல்லாம். தற்போது நான் நடிப்பதை பார்த்து மனைவி ஜெயா எப்போதாவது பாராட்டுவார். ஆனால் எப்போதும் இல்லை. எனது பேத்தி நவ்யா நாவேலி நந்தா, படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது தவறான தகவல். அவர் தற்போது படிப்பில் பிசியாக உள்ளார்.
ராம்கோபால் வர்மா மிகச்சிறந்த திறமைகளை பெற்றவர். மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவருடன் மகிழ்ச்சியாக பணியாற்றுகிறேன்.
பனாமா பேப்பர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்து விட்டேன். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் எனது பதில்களை தெரிவித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்












