நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை போதியளவு நடவடிக்கையை முன்னெடுக்க வில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கட்டுவாபிடிய பிரதேசத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ ஆலயத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த ஆலயத்தைப் பார்வையிடும் போது கடந்த 10 வருடங்களுக்கு முன்னைய ஞாபகத்தைத் தான் ஏற்படுத்துகின்றது. இது பயங்கரமான ஒன்று எனவும், இதனை ஒழிப்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் ஒன்றுக்கு வருவது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நகைச்சுவையான பேச்சுப் பேசுவதற்குரிய சந்தர்ப்பம் அல்ல இது. பாதுகாப்புச் செயலாளருக்கு இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கூறத் தேவையில்லை. அவர் அதனை தானாக செய்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி இதுவரையில் தன்னை அழைத்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடாத்தவில்லை. தகுதியான பொருத்தமானவர்களை பாதுகாப்பு பிரிவுக்கு நியமிக்கப்படுவதை விடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு தேட முடியாது.
ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து விரைவாக தீர்மானத்துக்கு வரவேண்டும். தாமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

