கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்களில் 53 பேரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பல்வேறுபட்ட பிரிவுகளின் பிரதானிகளினால் தொடர்ச்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், இவர்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இதுவரையில் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று பாதுகாப்பு ஊடகப் பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

