மகளிர் தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் நடிகை வரலட்சுமி கூறியிருப்பதாவது: எல்லா பெண்களுக்கும் நான் மகளிர் தின வாழ்த்துக்களை சொல்வேண்னு மட்டும் நினைக்காதீங்க. அப்படி நான் சொல்லப் போவதில்லை. எல்லா நாளும் மகளிர் தினமாகத்தான் ஒவ்வொரு மகளிருக்கும் இருக்க வேண்டும். இன்று மகளிர் தின வாழ்த்துக்களை சொல்லி விட்டு, மறு நாள் காலை பேப்பரைத் திறந்தால், பாலியல் வன்முறை, பெண் பலி என முகத்தில் அறையும் செய்திகளைப் பார்க்கும்போது, வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும்.
சந்தோஷம் இல்லாமல் சந்தோஷமாக மகளிர் தினத்தை எப்படி கொண்டாட முடியும். எல்லா விஷயங்களிலும் ஒவ்வொரு பெண்ணும், ஆண் போல சுதந்திரமாக செயல்பட வழி வகை செய்ய வேண்டும். இங்கிருக்கும் போலீஸ் – சட்டங்களையெல்லாம் நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம் ஒவ்வொருவருக்கும் நாம் தான் பாதுகாப்பு. வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக செல்ல வேண்டும். அதற்காக, ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய பைக்குள் பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய்த் தூள் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அந்தப் பெண் தான் முன்னின்று போராட வேண்டும். ஒரு பக்கெட் தண்ணீருக்கு சண்டைப் போட்டு ஜெயிக்க முடியும் பெண்களால், எதையும் சாதிக்க முடியும்; வெற்றி பெற முடியும். அதனால் பெண்களுக்கு வலிமை இல்லை என யாரும் சொல்லி விட முடியாது. பெண்ணாக பிறந்ததற்காக, ஒவ்வொரு பெண்ணும் பெருமைபட வேண்டும். அதனால், ஒரு நாளும் பெண்ணை பெண்ணே பாரமாக நினைக்கக் கூடாது. ஒவ்வொரு நாளும் பெண்ணான உங்களை நீங்களே கொண்டாடுங்க. எல்லா நாளையும் மகளிர் தினமா நினைங்க.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

