தமிழ் சினிமாவில் ‘வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்’ போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்தபாலன். தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜெயில்’ படத்தை எடுத்து முடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் வெளியீட்டிற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனாலும், படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.
இதனிடையே, படத்தின் இயக்குனர் வசந்தபாலன், முகப் புத்தகத்தில் வருத்தமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம். ஆனா…..இந்த எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது,” என அவர் எழுதியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து கடைசியாக வெளிவந்து ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் சுமாராக ஓடியது. இருந்தாலும் ஜி.வி-க்கு தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர மார்க்கெட் இல்லாதது ‘ஜெயில்’ படத்தின் வியாபாரத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

