கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983ம் ஆண்டு முதன் முறையாக உலககோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் படம் தயாராகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கேப்டன் கபில்தேவ்வாக நடிக்கிறார். இவருடன் தாஹிர் ராஜ் பாஷின், ஜீவா, சாஹிப் சலீம், ஜதீன் சர்னா, சிராக் படேல், டிங்கர் சர்மா, நிஷாந்த் தாஹியா, ஹார்டி ஷந்து, ஷஹில் கத்தார், அம்மி விர்க், ஆதிநாத் கொதாரே, தாய்ர்யா கர்வா, பத்ரி, பங்கஜ் திரிபாதி ஆகியோர் அணி வீரர்களாக நடித்துள்ளார்கள். தீபிகா படுகோன் கபில்தேவ் மனைவி ரோமி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கபீர்கான் இயக்கி உள்ளார்.
ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், ஒய் நாட் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து விநியோகிக்கும் இத்திரைப்படம் 2020, ஏப்ரல் 10 உலகம் முழுதும் தமிழ் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிடுகிறது.
கமல் கூறுகையில், ‛‛83 படத்தை தமிழில் வழங்குவதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். வரலாற்றின் வெற்றி பக்கங்களை, அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்த கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் திரையில் உருவாக்கி அளிப்பதில் கர்வமும், பெருமையும் கொள்கிறேன். அது மட்டும் அல்லாமல் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற சீரிய கருத்தை இந்த தேசத்து மக்களின் மனதில் விதைத்த வகையில் இந்த அணிக்கு சிறப்பு மரியாதை உண்டு. முயற்சித்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கும் இந்த வெற்றியே சான்று. தன்னம்பிக்கையும், மனத்திடமும், இந்த வெற்றிக்கு ஊக்க மருந்து. பல்வேறு மக்களுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் தந்த கதையை, கபில்தேவ் தலைமையில் மொத்த அணியும் போராடி, உலககோப்பையை வென்ற கதையை நம் மக்களுக்கு தமிழில் அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

