ரஜினி, தற்போது தர்பார் படத்தில் விட்டுப் போன காட்சிகளை முடிக்கும் பணியில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ரஜினி வளையல் அணிவிப்பது போன்ற போட்டோ ஒன்று நேற்று வைரலானது. இதனையடுத்து யார் அந்த பெண் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலவ துவங்கியது.
இந்த போட்டோ பற்றி விசாரித்த போது, ரஜினியுடன் அந்த போட்டோவில் இருந்த ரசிகர், இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை விவரித்தார். தினமலர் இணையதளத்திற்காக தொலைப்பேசி மூலம் அவர் அளித்த பேட்டி விபரம் :
எனது பெயர் ராகவா விக்னேஷ். எனது மனைவி பெயர் ஜெகதீஸ்வரி. நாங்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் என் அப்பா, நான் என அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். எனக்கு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. எங்கள் வீடு முழுவதும் ரஜினி படம் தான் இருக்கும். எனது மனைவியும் ரஜினி ரசிகர் தான்.பிறகு கர்ப்பமான எனது மனைவியிடம் என்ன ஆசை உள்ளது என கேட்டேன்.
தனக்கு ரஜினியை பார்க்க வேண்டும் என்பது தான் ஆசை என கூறினார். அவர் கர்ப்பமாகி 4வது மாதத்தில் இருந்து ரஜினியை சந்திக்க அபாயின்மென்ட் கேட்டிருந்தேன். தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக என் மனைவி கர்ப்பமடைந்திருப்பதை யாரிடமும் சொல்லவில்லை. தர்பார் பட சூட்டிங்கின் கடைசி நாளில் ரஜினியிடம் நான் அபாயின்மென்ட் கேட்டது பற்றி கூறி உள்ளனர்.
தற்போது என் மனைவிக்கு 9வது மாதம். இந்த தகவலை கூறியதும் திட்டிவிட்டு, உடனடியாக வர சொல்லுங்கள் என ரஜினி சொல்லி உள்ளார். சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றோம், அப்போது நடித்துக் கொண்டிருந்த ரஜினி, என் மனைவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து, கையெடுத்து கும்பிட்டபடி எங்களிடம் வந்து பேசினார். நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினோம். அப்போது என் மனைவி கையில் எடுத்துச் சென்றிருந்த வளையலை கொடுத்து, அப்பா ஸ்தானத்தில் இருந்து இந்த வளையலை எனக்கு போட்டு விடுங்கள் என கேட்டார்.
உடனே அவரே வளையலை வாங்கி இரு கைகளிலும் போட்டு விட்டார். அது சொல்ல முடியாத சந்தோஷம். இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். நான் கேமிராமேனாகவும், போட்டோஷாப் டிசைனராகவும் உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

