இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ரிக்கார்டிங் தியேட்டர் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. இளையராஜா தனது அத்தனை படங்களுக்கும் அங்குதான் இசை அமைத்தார். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இதனை செய்தார். தற்போது இளையராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதனால் ஸ்டூடியோ வருமானமும் குறைந்து விட்டது. இதனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவை காலி செய்ய சொல்லிவிட்டு அந்த ஸ்டூடியோவை வேறு பணிகளுக்கு பயன்படுத்த தொடங்கி விட்டது.
இந்த நிலையில் திரையுலகினர் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரை சந்தித்து இளையராஜாவின் காலம் வரை அவரை அந்த ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுதிக்க கேட்டு பேச இருக்கிறார்கள். இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாக்வுகும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் இளையராஜாவின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

