திருச்சி அருகே சுஜித் என்ற சிறுவன் ஆழ்துழாய் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடி வருகிறான். இது நாட்டு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு அறம் என்று ஒரு திரைப்படம் வந்தது. ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து விடும், குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான, சினிமா கூத்தாடிகளின் சமூக அக்கறை அது. ஆனால், அரசியல் கூத்தாடிகள் அதிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.
அரசாங்கமே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்கிற சோம்பேறித்தனம் மக்களிடம் பெருகிவிட்டது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் விட்டால், அது ஆபத்தானதே, அதை மூடி விட வேண்டுமே என்ற தனி மனித ஒழுக்கம் குறைந்து விட்டது. நாம் எப்போது திருந்தப்போகிறோம் என்பது தெரியவில்லை.
இப்போது, அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், களத்தில் நின்று, குழந்தையை மீட்க போராடுவது, கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. இருந்தாலும், குழந்தையை கண்ணால் கண்டால் தானே, பெற்ற தாய்க்கும், எனக்கும், தமிழக மக்களுக்கும், நெஞ்சு படபடப்பு அடங்கி நிம்மதி வரும். எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்து விட்ட நம் நாட்டில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஒரு நல்ல தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க முடியாதா.
இறைவா, நாங்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் இருக்கிறோம். வழி தெரியாமல் தவிக்கிறோம். அழுது அழுது உன்னிடமே மன்றாடுகிறோம். எங்கள் குழந்தையை எப்படியாவது மீட்டுக்கொடுத்து, எங்கள் இதயங்களின் படபடப்பை போக்கு.
இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

