அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்த படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், “ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறியிருந்தார்.
அதோடு நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்தார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். இந்த அழைப்பை ஏற்று தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் எஸ்.ஒய்.கவுதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கரன் மற்றும் வசனகர்த்தா பாரதி ஆகியோர் மலேசியா சென்றுள்ளனர்.
படக்குழுவினருடன் மலேசியாவில் உள்ள டி.ஜி.வி. சேத்தியாவாக் என்ற மாலில் உள்ள ஆர்.ஜி.வி. திரையரங்கில் படக்குழுவினருடன் மலேசிய கல்வி அமைச்சரும், கல்வி துறை அதிகாரிகளும் பார்க்கிறார்கள். அதன் பின் படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் மலேசிய அமைச்சர்.

