மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் பிரித்விராஜ், முதன்முறையாக லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்க, முக்கிய வேடங்களில் விவேக் ஓபராய், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையை கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி எழுதியுள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான பல படங்களுக்கு கதை எழுதியவர்.
இந்த நிலையில் லூசிபர் படம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மறைந்த ட்ராபிக் படம் புகழ் இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் கதை என்றும், அவர் லூசிபர் படத்தை இயக்கும் எண்ணத்தில் இருந்தார் என்றும் ஒரு தகவல் உலாவிவருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் பிரித்விராஜிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, “லூசிபர் என்கிற படத்தலைப்பு இயக்குனர் ராஜேஷ் பிள்ளையிடம் தான் இருந்தது. ஆனால் அவர் அதை படமாக்குவதற்காக தயார் செய்து வைத்திருந்த கதை வேறு.. அவர் இறப்பிற்குப் பின் அந்த படம் அப்படியே கைவிடப்பட்டது.. அந்த தலைப்பு தற்போது நாங்கள் உருவாக்கியுள்ள கதைக்கு மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை தலைப்பை மட்டும் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.. எங்களுடைய கதை முற்றிலும் புதிய பாணியிலான ஒரு கதை” என விளக்கம் அளித்துள்ளார் பிரித்விராஜ்.