தலைப்பைப் படித்ததும் இப்போது நடந்த விஷயம் என நினைத்துவிட வேண்டாம். அப்படி வரச் சொன்னாலும் விஜய் சேதுபதி வருவார், ஆனால், ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டு அவர் பல முத்தங்களைக் கொடுக்க வேண்டி இருக்கும். தலைப்பில் சொன்ன விஷயம் சுமார் 9 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.
விஜய் சேதுபதிக்கு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நாயகனாக உயர்வு கொடுத்து சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. ‘கண்ணே கலைமானே’ படத்தில் நாயகன் உதயநிதியின் தோழியாக ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் நாயகி வசுந்தரா நடித்துள்ளார். அவரைப் பற்றிப் பேசும் போதுதான் தலைப்பில் உள்ள விஷயத்தைப் பற்றி சீனு பேசினார்.
“தென்மேற்குப் பருவக்காற்று’ படம் எடுக்கும் போது விமானத்தில் வந்தவர் வசுந்தரா மட்டும் தான். அவங்களுக்குத்தான் ஏர்போர்ட்டுக்குக் காரை அனுப்பினோம். மத்த எல்லாருமே பஸ்ஸுலதான் படப்பிடிப்புக்குப் போனோம். இந்தப் படத்துல ஒரு வலிமையான பெண்ணா நடிச்சிருக்காங்க,” எனப் பாராட்டினார்.