‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் யு டியுபில் 15 கோடி பார்வைகளைக் கடந்து மற்றுமொரு சாதனையைப் படைத்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி 2ம் தேதி யு-டியுபில் வெளியிடப்பட்ட இந்தப்பாடல், ஒரு மாத காலத்திற்குள் 15 கோடி பார்வைகளைப் பெற்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்த் திரைப்பட வீடியோ பாடல்களில் முதல் முறையாக 15 கோடி பார்வைகளைக் கடந்த பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பார்வைகள் இந்தப் பாடலுக்கு கடந்த ஒரு மாத காலமாக கிடைத்து வருவது ஆச்சரியமளிப்பதாகவும் உள்ளது.
தனுஷின் முந்தைய சாதனையான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் சாதனையை முறியடிக்க இந்தப் பாடலுக்கு இன்னும் இரண்டரை கோடி பார்வைகள்தான் தேவை. அதை அடுத்த பத்து நாட்களில் முறியடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சாய் பல்லவி நடித்து, நடனமாடியுள்ள இரண்டாவது திரைப்படப் பாடல் 15 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு முன் சாய் பல்லவி நடித்து தெலுங்கில் வெளிவந்த ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ பாடல் 18 கோடி பார்வைகளைத் தற்போது கடந்துள்ளது.
‘ரவுடி பேபி’ பாடலுக்குப் பிறகு இந்த தெலுங்குப் பாடலைப் பற்றிக் கேள்விப்படும் பலரும், அந்தப் பாடலையும் பார்த்து பார்வை எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்கள். ஆனாலும், ‘வச்சிந்தே’ பாடலுக்கு 4 லட்சம் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ‘ரவுடி பேபி’ பாடலின் லைக், ‘ஒய் திஸ் கொலவெறி’ லைக்கான 12 லட்சத்தை கடந்து 13 லட்சத்தை பெற்று அதிலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

