தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு ஜான் தேரே நாம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பர்ஹின் டில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று தனது காரில் டில்லி செலக்ட் சிட்டி மாலுக்கு ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சில வாலிபர்கள். அவரிடம் நீங்கள் காரை சரியாக ஓட்டவில்லை என்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது திடீரென அவர்கள் பர்ஹின் அணிந்திருந்த சங்கிலி, கை பையை பறித்துக் கொண்டு ஓடினார். பர்ஹின் காரை விட்டு இறங்கி அவர்களை துரத்தி உள்ளார். அவரை அந்த கொள்ளையர்கள் நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு ஓடிவிட்டனர். இதனால் பர்ஹின் ரோட்டிலேயே மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனியாக செல்லும் பணக்கார பெண்களை தாக்கி கொள்ளை அடிக்கும் தக் தக் என்ற கும்பல்தான் இதனை செய்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

