இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அவரின் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பிப்., 2 மற்றும் 3 தேதிகளில், சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு திரையுலகினரையும் இந்த நிகழ்ச்சியில் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுவிக்கும் விதமாக, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து அழைப்பு விடுவித்தார் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால். அவருடன் செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்ஆர்.பிரபு, விழா குழு உறுப்பினர்கள் நந்தா, மனோபாலா உள்ளிட்டவர்களும் உடன் சென்று அழைப்பு விடுத்தனர்.

