விஜய் தொலைக்காட்சியில் விரைவில் இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. ஒன்றின் பெயர், நீலகுயில் மற்றொன்றின் பெயர், சிவா மனசுல சக்தி. இரண்டுமே திரைப்படங்களின் தலைப்புதான்.
சிவா மனசுல சக்தி சீரியலின் ஹீரோ, ஒரு சிவ பக்தன். உயிரைக் கொடுத்து காதலர்களை சேர்த்து வைக்கிற நல்ல மனசுக்காரன். ஊருக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிற அவனுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதே என்கிற கவலை ஊருக்கு. எனக்குன்னு ஒருத்தியை என் முன்னால சிவன் நிறுத்துவான் என்று நம்புகிறார் ஹீரோ. வந்து நிற்கிறாள் சக்தி, ஒரு பிரச்சினையோடு அதன்பின் என்ன நடக்கிறது என்பது சிவா மனசுல சக்தியின் கதை.
மற்றொரு தொடரான நீலக்குயிலின் கதை சீரியலுக்கு புதுசு. கும்கி, மைனா படங்களின் டைப்பிலான கதை. ஹீரோவுக்கு சென்னையில் ஒரு காதலி இருக்கிறாள். ஒரு பணிநிமித்தமாக மலை கிராமத்துக்கு சென்ற இடத்தில் அங்குள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். மலைவாழ் மனைவி, நகர்வாழ் காதலிக்கு இடையில் ஹீரோ. மூவருக்கும் நடக்கிற முக்கோண காதல் பிரச்சினை தான் நீலக்குயில். பெரும்பகுதி தொடர் எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இரு தொடர்களும் புத்தாண்டு அல்லது பொங்கலில் இருந்து ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.

