நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், அரூரில் மக்கள் மத்தியில் பேசியதாவது : இங்கு கூடியிருக்கும் இளைஞர் கூட்டம், இதுவரை நடந்த, நடக்கின்ற ஆட்சிகள் மீது பெரும் கோபத்திலும், ஏமாற்றத்தையும் கொண்டுள்ளனர். அவர்கள் ஆட்சி மாற்றம் வேண்டுகிறார்கள், அதனை மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.
இங்கு நான் வந்திருப்பது உங்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக ஓட்டு பேரம் பேச வரவில்லை, இலவசங்களை தருவேன் என்று வாக்குறுதி தர வரவில்லை. மக்களுக்குத் தேவையானவற்றை மக்களே பெற்றுக் கொள்ளும் வகையில் அரசு அமைந்திட எங்கள் கட்சி உழைத்திடும்.
ஓட்டிற்காக ஒரு நாள் பணத்தை பெற்றுக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள். சில ஆயிரம் ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு உங்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான பணத்தை விற்று விடாதீர்கள்.
மக்களின் முழு அதிகாரத்தையும் மக்களிடமே கொடுக்கும் கிராம சபைகளில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள். இளைஞர்கள் தைரியமாக உங்கள் எதிர்காலத்திற்காக குரல் கொடுக்க தயாராகி விட்டீர்கள் என்றால் நாளை நமதே.
இவ்வாறு கமல் பேசினார்.
