அஜித் நடித்த வாலி படத்தில் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பிறகு விஜய் நடித்த குஷி படத்தை இயக்கியவர் பின்னர் தானும் ஹீரோவாகி விட்டார். இந்த நிலையில், தற்போது அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகும் உயர்ந்த மனிதன் படத்தில் அவருடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த படத்தை அவர் ஏற்கனவே நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். தற்போது இப்படத்தின் பிரீ-புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தொடக்க விழாவில் எஸ்.ஜே.சூர்யா கூறுகையில், நான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானபோதும், நடிகராக வேண்டும் என்பது தான் எனது முதல் நோக்கமாக இருந்தது. நடிகராக வேண்டும் என்பதற்காகத் தான் ஆபீஸ்பாய் வேலையில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்து வந்தேன்.
அதற்காகத் தான் டைரக்டரானேன். பின்னர் என்னை நானே இயக்கியதோடு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்தேன். இனிமேல் இதை தொடருவேன். தற்போது கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்கிறேன். அதுவும் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கிறேன்.
இந்த படத்தின் மூலம் அமிதாப்பச்சன் தமிழில் அறிமுகமாகிறார். நான் இந்தியில் அறிமுகமாகிறேன். அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பதென்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடன் நடிப்பதால் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நான் தெரியப்போகிறேன்.
மேலும், இந்த படத்திற்கு அமிதாப்பச்சனை புக் பண்ணுவதற்கு முன்பு அவர் இந்த படத்தில் நடிப்பாரா? என்று டைரக்டர் தமிழ்வாணனிடம் கேட்டேன். அதற்கு அவர், முயற்சி செய்வோம். கதை பிடித்தால் நடிக்கட்டும். இல்லையேல் வேறு நடிகரைப் பார்ப்போம் என்றார்.
அதையடுத்து அவரிடம் கதை சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆக, உயர்ந்த மனிதன் கதை வெற்றிபெற்று விட்டது. அதனால் உயர்ந்த மனிதன் படமும் வெற்றி பெறும் என்பது இப்போதே உறுதியாகி விட்டது என்றார் எஸ்.ஜே.சூர்யா.
