நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாக மாறிவிட்டார்.
மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அவரின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு முதன்முறையாக நாளை வெளியாகவுள்ள படம் விஸ்வரூபம் 2.
இப்படத்திற்கு தடை கேட்டு பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஐகோர்ட்டில் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.
அதாவது… 2008-ம் ஆண்டு மர்மயோகி என்ற படத்தில் கமல் நடிக்க படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
ரூ.100 கோடி செலவில் திட்டமிடப்பட்ட அந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக ரூ.6.90 கோடி வழங்கப்பட்டது.
அத்துடன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு ரூ.4 கோடி கொடுக்கப்பட்டது.
அந்தப்பணம் ‘மர்மயோகி’ படம் தயாரிக்க பயன்படுத்தப்படாமல், “உன்னைபோல் ஒருவன்” படத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே ரூ.6.90 கோடி கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
எனவே ‘மர்மயோகி’ படத்திற்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ‘விஸ்வரூபம் 2’ படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரமிட் சாய்மீரா நிறுவனம் ரூ.4 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், அந்த பணம் மர்மயோகி படத்தின் ஆரம்பகட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மர்மயோகி படத்துக்கு வேறு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தை திருப்பி வழங்கிவிடுவதாக கமல்ஹாசனின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
