நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சி கொடியில் 6 கரங்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இருப்பதுபோல சின்னம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சின்னத்தை வேறு சில அமைப்புகளும் ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக தெரியவந்தது. இதுபற்றி சமூக வலைதளங்களிலும் பலவித தகவல்கள் வெளியாகின.
விட்டுக்கொடுத்தனர்
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று மாலை சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-
மும்பையில் இருந்து தமிழர் பாசறையை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எங்களது கட்சி கொடியில் உள்ள சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர். என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்கு தருகிறார்கள்.
விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர். எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
ஒருவரின் மரண இறுதி ஊர்வலம் போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தேன். ஆர்.சி.சக்தி, ஸ்ரீதேவி போன்றவர்கள் என் குடும்பத்தினர் போன்றவர்கள் தான்.
அதனால் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் மும்பை செல் கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி கூறுகையில், ‘எங்களின் சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. கமல்ஹாசன் ஒரு ஜனநாயக கோவில் கட்ட எங்களின் சின்னத்தை பயன்படுத்த இருக்கிறார் என மகிழ்ச்சி அடைந்தோம். அதனால் இந்த சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம். நாங்களும் அந்த சின்னத்தை பயன்படுத்துவோம். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் சிறந்த சேவையாற்ற மும்பை தமிழர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம்’ என்றார்.