திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கெனவே பாடகி சின்மயி உள்பட 3 பேர் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கும் நிலையில் தற்போது மேலும் இரண்டு இசைக் கலைஞர்கள் அவர் மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வரும் இசை கலைஞர் சிந்துஜா ராஜாராம் என்பவர் அங்குள்ள மீடியாக்களில் பேசியிருப்பதாவது : 15 ஆண்டுகளுக்கு முன் இசையில் சாதிக்கும் லட்சியத்தில் இருந்தேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னையில் வைரமுத்து நடத்தி வரும் பெண்கள் விடுதியில் தங்கினால் எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என எனது அம்மா, அங்கு என்னை சேர்க்க முயற்சி செய்தார். அப்போது, வைரமுத்துவிடம் அம்மா பேசினார். அவர் என்னை நேரில் சந்திக்க விரும்பினார். அவரை சந்தித்து பேசினேன்.
அப்போது, உங்கள் பேச்சில் நீண்ட நாள் நட்பு தெரிந்தது என அவர் சொன்னார். பிறகு நான் கம்போஸ் செய்த பாடலை கேட்டு, உங்களை ஏ.ஆர்.ரஹ்மானிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்றார். திடீரென ஒரு நாள் அவரிடம் அழைத்து சென்றார். பிறகு மீண்டும் எனக்கு போன் செய்து, ரஹ்மான் உங்கள் இசையை கேட்டு சந்தோஷப்பட்டார். நீங்கள் என்னை அலுவலகத்தில் பாருங்கள். உங்களைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறேன். உங்களை நான் மிஸ் செய்கிறேன் என்றார். அந்த பேச்சுதான் எனக்கு எச்சரிக்கையாக அமைந்தது. அவரை சந்திக்கக் கூடாது என முடிவு செய்தேன்.
ஆனால் தொடர்ந்து எனக்கு போனில் அழைப்பு விடுத்தபடி இருந்தார். திடீரென ஒருநாள் போன் செய்து நான் உங்களை காதலிக்கிறேன் என்றார். சார் நீங்க என் அப்பா மாதிரி.
இப்படியெல்லாம் பேசாதீங்க. எனக்கு பிடிக்கல என்றேன். அடுத்தமுறை போனில் பேசியவர், தான் சொன்ன விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டார். மீண்டும் தன்னை பார்க்க வரும்படி அழைப்பு விடுத்தார். நான் மறுத்துவிட்டேன்.
இவ்வாறு சிந்துஜா ராஜாராம் கூறியுள்ளார்.
மற்றொரு பாடகியான அனன்யா கூறியிருப்பதாவது: 1998ல் பாடகியாகும் கனவுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தேன். அப்போது எனக்கு 25 வயது. விளம்பர படத்தில் பாடினேன். அப்போதுதான் வைரமுத்துவை சந்தித்தேன். எனது பெயரை கேட்டு பாராட்டியவர், தனது அலுவலகத்துக்கு அழைத்தார். அப்போது பலர் முன்னிலையில் அங்கு நான் பாடினேன். அதன்பிறகு வாய்ப்பு எதுவும் வரவில்லை. ஆனால் தினமும் அவர் எனக்கு போன் செய்வார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உனக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். நான் அவரிடம் வாய்ப்பே கேட்கவில்லை. அவராக இதையெல்லாம் சொன்னார்.
ஒருமுறை போன் செய்தபோது, மலேசியாவில் தமிழ் சங்கம் விருது விழாவுக்கு செல்கிறேன். நீயும் உடன் வர வேண்டும் என்றார். பாடுவதற்காகவா? நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவா? என கேட்டேன். இரண்டும் கிடையாது. உனக்கு புரியவில்லையா? நமது துறையில் இதெல்லாம் சகஜம். பட்டும் படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.